Saturday, January 16, 2010

குறுக்குதுறை ரகசியங்கள் - நான் ஸ்டாப் சிரிப்பு கேரண்டி

குறுக்குதுறை - திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முருகன் குடியிருக்கும் இடம். அங்கே உள்ள முருகன் எந்த அளவுக்கு பிரபலமோ, ஆற்றங்கரையும் அதே அளவுக்கு பிரபலம்.

பிறந்ததில் இருந்து ஒரே கட்சியில் இருக்கும் அப்பாவியான நெல்லை கண்ணன் எழுதிய நூல் "குறுக்குதுறை ரகசியங்கள்".

கதையின் நாயகன் அண்ணாச்சியும் அவருடைய உற்ற நண்பரான ராவன்னாவும். இவர்கள் இருவரும் சமூகத்தில் சந்திக்கின்ற மனிதர்களின் கதையை நெல்லை தமிழில் நகைச்சுவை கலந்து அருமையாய் விவரித்து இருக்கிறார். இதில் நீங்கள் சந்திக்கிற மனிதர்களை உங்கள் வாழ்வில் என்றாவது நீங்கள் சந்தித்திருக்கலாம். இந்த கதையின் நாயகனான அண்ணாச்சி ரெம்ப அன்பானவர். ஊர் பெரியவர், ஊரில் அனைவரின் பிரச்சினையையும் தீர்த்து வைப்பவர். படிக்க படிக்க ஒவ்வொரு அத்தியாயமும் அடக்க மாட்டாமல் சிரிப்பீர்கள். சூடான சுவையான இருட்டு கடை அல்வாபோல் உங்கள் மனதிற்குள் வழுக்கி செல்லும். ரெம்ப வருசமா தேடிட்டு இருந்த புத்தகம். எதேச்சையாக புத்தக கண்காட்சியில் சிக்கியது.இனி புத்தகத்தில் இருந்து..

அய்யா
என்ன தாஸ் ?
அவாள் டெய்லர் வந்திருக்கா
என்ன விசயமாம் ஒங்களைத்தான் பாக்கணுமாம்
ஏய் சிவன், என்னடே?
அண்ணாச்சி, இந்த அம்பி தும்பம் பெரிசா இருக்கு, அண்ணாச்சி.
நீ வேற வந்து என்னலே?
அண்ணாச்சி, நேத்து காலேல அப்பந்தான் வந்து கடைய தொறந்துட்டு இருக்கேன். அம்பி அவசரமா வந்தான். அண்ணாச்சி, டேப்ப எடுத்துகிடுங்க; ஒரு பெரிய ஆர்டரு. வாங்க சைக்கிள்ல போயிடலாம்னு கூப்டான். நானும் கூமுட்டை மாதிரி கடையை தொறந்த உடனே அடைச்சிட்டு சைக்கிள்ல ஏறி போனேன். வழியிலேயே பாய் கடைல ரெண்டு வடை , டீ பொறகு வில்ஸ் சிகரெட்டு எல்லாம் முடிச்சிட்டு, நெல்லையப்பர் கோயிலுக்கு உள்ள கூட்டிட்டு போறாம்.


ஏய், என்னடே அம்பி கோயிலுக்கு உள்ளே கூட்டிட்டு போறேன்னேன்? இவம் சொல்லுதாம் அண்ணாச்சி. நாலு கோபுரத்தையும் அளவெடுத்து நாலுக்கும் உறை தைக்கணுமாம். ஏன்னா கடவுள் கோபுரம் மழைலையும் வெயல்லையும் நனையிறதும், காயிறதும் இவனுக்கு மனசு ரெம்ப சங்கடபடுதாம்.அதான் என்னைய கூட்டிட்டு வந்தானாம்.அதுக்கு மேலே திமிர பாருங்க அண்ணாச்சி. அந்த உறை தையல் மசின்ல தைக்க கூடாதம்.சாமி காரியமாம்.மனுசங்களுக்கு தைக்கிற மிசின்ல தைக்க கூடாதம். முழுசும் கைத்தையல் போடணுமாம்.கோபுரத்தை அளவெடுத்த பொறகு, யானைக்கும் அளவெடுத்து ஒரு சட்டையும் பேண்டும் தச்சு கொடுக்கணுமாம். அண்ணாச்சி கத்திரியாலே குத்தி கொல்லணும்னு தோணிச்சு, வெளியே சொல்லவும் வெக்கமா இருந்துச்சு.உங்க தைரியதிலேதான் அண்ணாச்சி இவன் இத்தனையும் செய்தான்.


யே நீ கூமுட்டைதனமா அவம்பின்னால போய்ட்டு, அவாள ஏண்டா குற சொல்லுத. வந்து கூப்ட்ட யாரு எவன்னு அறிவு இல்லாம நீ எல்லாம் என்னடே தொழில் பாக்கே


டைலர்
சிவன் தொடர்ந்து, காவடி எடுத்துகிட்டு பிச்சைக்கு வாறானுவ, அவனுககிட்ட போய், இவாள் ஒரு நாலனாவ போட்டு, அவங்ககிட்ட திருநீறு பூசிக்கிட்டு, அவங்க தட்டிலேருந்து ஒருகுத்து திருநீற எடுத்து வாயில போட்டுட்டு வந்தாம். மூதேவி என்ன பக்தி முத்திருசெனு பாக்கேன். வாய்குலேருந்து முழுசா ஒரு ரெண்டு ரூபா நாணயத்தை எடுத்து கழுவுதாம். எல இப்படி செய்யலாமாலே, சாமி காரியமில்லையானு கேட்டா, அவங்க என்ன பழனிகா போகபோறாணுவ, அவங்க மட்டும் எப்படி ஏமாத்தலாம்னு கேக்குறான்.

அம்பி..பாருங்க அண்ணாச்சி, என்ன குறை சொல்லனும்னே ஒரு மாநாடு மாதிரி கூட்டம் போட்டு பேசுதாங்க அண்ணாச்சி. தீபாவளிக்கு நீங்க ஒரு சட்டை எடுத்து குடுத்தீங்களா. கமிசன் கடை தாத்தா ஒரு சட்டை துணி எடுத்து கொடுத்தாக. அதை கொண்டு போய் தைக்க குடுத்தா, ஒனகெல்லாம் தைக்கவாடே நாங்க டைலர் கடை வச்சிருகொம்னாரு. அதான் பெரிய ஆளு கோபுரத்துக்கும் யானைக்கும் தைகட்டும்னு கூட்டிட்டு போனேன்.

சரில,அதுக்கு துணி எடுத்து கொடுக்கணுமே நாயே. ஓங்க்கிட்டதான் வாய்கரிசி கிடையாதே.என்னலே பண்ணுவே.துணி எடுத்து குடுலே,தைக்க சொல்லிடுவோம்.போக்கத்த மூதேவி.

யாரு போக்கத்தவன், ஒடனே துணியெடுத்து தந்து தையகூலியும் தர்ரதுகெல்லாம் ஆள் வச்சிருகேனாகும்.

அது யாருல, இந்த ஊர்ல எங்களுக்கு தெரியாமல் அப்படி ஒரு ஆளு?

அதுவெல்லாம் இல்ல அண்ணாச்சி, பாங்கில லோன் போட்டுகிட்டு பெரிய பெரிய காரெல்லாம் வச்சுகிட்டு புதுசு புதுசா ஆளுங்க வந்திருக்காங்க. அவங்களுக்கு எங்க பார்த்தாலும் அவங்க பேரு இருக்கனும். அப்படி ஒரு ஆளு இருக்காரு. என்னா, அந்த உறையில உபயம்னு அவரு பேரு போடணும் அவ்வளவுதான்.


எல்லாரும் சிரித்தார்கள். டைலர் உட்படத்தான்.


***************************************************************************

பின் குறிப்பு : - இவர் வா மீத முலை எறி !!! என்று கவிதை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். தலைப்புக்கு என்ன அர்த்தம்னு சத்தியமா எனக்கு புரியல ஆனா அதில் உள்ள கவிதைகள் ரெம்ப எளிமையா என்னை போன்ற கவிதையை கண்டால் காத தூரம் ஒடுபவ்ர்களுகும் புரியிற மாதிரி இருக்கு.

உலக தமிழர்கள் ஒன்றுபடுங்கள்
உள்ளூர்த் தமிழர்கள் சாதி பேணுங்கள்.

நடிகை

கவர்ச்சி வேண்டும்
காதல் வேண்டும்

கட்டிப் பிடித்து
ஆடவும் வேண்டும்

மைதுன உணர்வில்
மகிழ்ந்து விட்டு

நடிகையின்
கற்பில்

விமர்சனம்
வேறு
இந்த தொகுப்பில் இருக்கும் சில கவிதைகளை படிக்க இங்கே செல்லவும்.



**************************************************************

18 comments:

எறும்பு said...

புத்தகத்த எங்கப்பா விமர்சிச்சனு கேக்கறீங்க... விமர்சனம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளு இலீங்க.. அதனால வெறும் அறிமுகம் மட்டும்தாம்.. நீங்களே படிச்சு தெரிஞ்சுகோங்க

சிநேகிதன் அக்பர் said...

அருமையான விமர்சனம்.

நம்ம ஊர்க்காரராச்சே சும்மாவா :)

vasu balaji said...

:)). நல்ல தமிழ். கவிதை நச்.

சுரேகா.. said...

அவரது நகைச்சுவை உணர்வுக்கு இது ஒரு எடுத்துக்காட்டுதான். அவர் பேசும்போது பாருங்கள்! நகைச்சுவையோடு சேர்த்து..எவ்வளவு தகவல்கள், அனுபவங்கள், அறிவுரைகள்..அத்தனையும் உண்மைகள்!

புத்தகத்தை எடுத்துப்படிக்க ஆரம்பித்தால்..வைக்க மாட்டோம் . அப்படி ஒரு சுவாரஸ்யம்!

அப்புறம்..


-இங்கே நடக்கும் அநியாயங்களைப்பார்த்து
கண்ணகியே வா மீத முலை எறி - என்று கண்ணகியைப்பார்த்து சொல்வது!
இப்போது புரிகிறதா? :)

-இங்கே நடக்கும் அநியாயங்களைப்பார்த்து
கண்ணகியே வா..!

சுரேகா.. said...

கடைசி பத்தி..

இரண்டு தடவை வந்துவிட்டது.
மன்னிக்கவும்.

தங்கள் பதிவு அருமை!
வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அருமையான தலைப்பு சார் அது,
கண்ணகி ஒரு முலை எறிந்து மதுரையை எரித்தாள்.
இன்று நடக்கும் அநியாயங்களுக்கு கண்ணகியை துணைக்கு அழைக்கிறார் ஆசிரியர். அந்த கவிதைப் புத்தகத்தின் அமைப்பும் அழகாக இருக்கும். நம் இல்ல நூலகத்துக்கு அழகு சேர்க்கும் புத்தகம்.

அண்ணாமலையான் said...

நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்...

Paleo God said...

அட நான் எடுத்து பார்த்துட்டு வெச்சிட்டு வந்துட்டேன் நீங்க வாங்கிட்டீங்களா..::))

விலை பதிப்பக தகவல்களை குடுங்க RG:))

சங்கர் said...

போன ஆண்டு திருவிழாவில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இவர் பேசுவதை கேட்டேன், நேரமாகி போனதால் மனமின்றி கிளம்பி வந்தேன்,

இந்த புத்தகத் திருவிழாவில் வாங்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், விட்டு போச்சு, பதிப்பகம் விபரம் குடுங்க

எறும்பு said...

நன்றி அக்பர்
நன்றி வானம்பாடிகள்
நன்றி சுரேகா (வருகைக்கும் தலைப்பை புரிய செய்ததற்கும்)
நன்றி கலகலப்ரியா (முதல் பின்னூட்டத்திற்கு)
நன்றி நாய்க்குட்டி மனசு
நன்றி அண்ணாமலையான்
நன்றி பலாபட்டறை
நன்றி சங்கர்

எறும்பு said...

வேலுக்கண்ணன் பதிப்பகம்
69,அம்மன் சந்நிதி தெரு
திருநெல்வேலி நகரம் - 627006

Phone - 0462 - 2337734

Book price : 50

சென்னைல எந்த ஸ்டால்ல கிடைக்கும்னு தெரியலை.

Unknown said...

இந்த புத்தகம் ஒரே ஒரு அறையில் வயதுக்கு வந்த பிள்ளைகளோடு குடும்பம் நடத்தும் தம்பதிகளின் பிரச்னை,மனைவியை இழந்த வயோதிகனின் தனிமை,திருமண வயது வந்தும் அதை பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்க செய்யும் தந்தையின் கையறு நிலை-தாய்-மகளின் மன தவிப்பு, பிறரின் பிரச்னைகளை[தாம்பத்ய பிரச்னை உட்பட] சுமூகமான முறையில் தீர்த்து வைக்கும் அண்ணாச்சி,அதற்கு தேவைபட்ட உண்மையான தகவல்களை திரட்டி வைத்திருக்கும் காரியதரிசி(ராவன்னா) என எண்ணற்ற விசயங்களை நெல்லை[கண்ணனின்]யின் நையாண்டி சொல்லாடலால் நகர்த்தி செல்லும்.அட புத்தகத்தை படிச்சு பாருங்க.

butterfly Surya said...

விலை பதிப்பக தகவல்கள் வேண்டாம்.

புத்தகத்தை கொடுங்கன்னு கேளுங்க சங்கர்.

நான் படிச்சிட்டு தரேன்.

Me the first... {இரவலுக்கு}

Romeoboy said...

நல்ல இருக்கு நண்பரே.. அடுத்த முறை சந்தையில் கண்டிப்பாக வாங்கணும்.

Anonymous said...

happy ya irruku enga ooru book enga nanpar book

நெல்லை கண்ணன் said...

அன்பே வடிவான தங்களுக்கு எனது நன்றி. வாழ்க தமிழுடன்.எனது காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள். குறுக்குத்துறை இரகசியங்கள் 5 வது பதிப்பு சென்னையில் எல்லா நூல் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் நன்றி. பெரியோர்க்கு வணக்கங்களையும் இளையோர்க்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும். தங்கள் அன்பின் அடிமை னெல்லைகண்ணன்

எறும்பு said...

திரு. நெல்லைகண்ணன் அய்யா தங்களின் வருகைக்கு நன்றி