இந்த வருட புத்தக கண்காட்சியின் போது, அருகில் இருந்த பதிவரிடம் ரெம்ப நாளா ஒரு புத்தகத்த தேடிட்டு இருக்கேன், கிடைக்கவேயில்லை என்றேன். வருடா வருடம் தன் எடைக்கு சமமாக புத்தகமா வாங்கி இலக்கியத்தை சாறு பிழிந்து குடிக்கும் பதிவர்(?!) அவர். பேர சொல்லுங்க, இப்பவே தேடி வாங்கிடலாம் என்றார். "கிருஷ்ணப்பருந்து" என்றேன். அட, இதையா தேடிட்டு இருக்கீங்க வாங்க நான் வாங்கி தரேன் தரமான பதிப்பும் இருக்கு, மலிவு விலை பதிப்பும் இருக்கு எது வேணும் உங்களுக்கு என்று எடுத்து காட்டியது ஆ. மாதவன் எழுதிய கிருஷ்ணப்பருந்து புத்தகத்தை. நான் தேடின புத்தகம் இது இல்லை, இந்த மாதிரி புத்தகத்த படிக்க கொடுத்து, பயபுள்ளைங்க என்னையும் இலக்கியவாதியா மாத்த பாக்கிறாங்க, அவங்க எண்ணம் நிறைவேற விடக்கூடாது என்று எண்ணியபடி அப்புறம் வாங்கிக்கிறேன் என்றபடி புத்தகத்தை கீழே வைத்தேன்.
நான் தேடியதும் கிருஷ்ணப்பருந்து புத்தகம்தான். நான் பள்ளியில் படிக்கும்பொழுது சாவி வார இதழில் அரஸ் ஓவியத்துடன் தொடராக வந்த கதை அது. வீட்டில் வாராவாரம் கதையை பிரித்து தனியாக பைண்ட் செய்து வைத்திருந்தார்கள்.அந்த கதையின் மூலம் மலையாளம். போன வாரம் லேண்ட்மார்க்கில் வேறு ஏதோ புத்தகத்தை தேடும் பொழுது நான் தேடிக்கொண்டிருந்த கிருஷ்ணப்பருந்து கையில் சிக்கியது. மலையாளத்தில் இந்த புத்தக்கத்தை எழுதியவர் பி.வாசுதேவன் தம்பி. தமிழில் இதை மொழிப்பெயர்த்த்வர் சிவன்.
மலையாள மாந்த்ரீகர்களை பற்றிய கதை இது. கிருஷ்ண பருந்தை ஆராதனா மூர்த்தியாக பரம்பரை பரம்பரையாக வழிபடும் ஒரு குடும்பம். அதில் உள்ள மாந்த்ரீகன், கிருஷ்ண பருந்தை வழிபட்டு அதன் மூலம் கிடைக்கும் மந்திர சித்தியை கொண்டு ஊருக்கு உதவுபவன். அவனை அழிக்க நினைக்கும் துர்மந்திர மாந்த்ரீகன் "பட்டேத்திரி". கிருஷ்ணபருந்தை வழிபடும் மாந்த்ரீகன் தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய முக்கிய அனுஷ்டானம் "பிரம்மச்சர்யம்". அந்த பரம்பரையில் வந்த மாந்த்ரீகன் தனக்கு மரணம் வருவதை அறிந்தவுடன், தனது மருமகனுக்கு மந்திர உபதேசம் செய்து வைத்துவிட வேண்டும். மருமக்கள் தாயம்.
கிருஷ்ண பருந்து அந்த கொட்டாரத்தின் மீது பறக்க, மாந்த்ரீகனாக இருக்கும் பப்பு மாமா தனது மரணம் நெருங்கிவிட்டதை உணர்வதாய் ஆரம்பிக்கிறது கதை. அன்றைய இரவு முடிவதற்குள் அவர் அடுத்த தலைமுறை மாந்த்ரீகனை உருவாக்கிவிடவேண்டும். அதற்கு அவர் தேர்வு செய்வது அவர் மருமகன் குமாரன் தம்பியை. அதை கண்டு அச்சப்படுகிறார் பப்பு மாமாவின் தங்கையும் குமாரன் தம்பியின் அம்மாவான குஞ்சிகுட்டி. ஏனெனில், குமாரன் தம்பிக்கு கஞ்சா புகைப்பது, பெண்களுடன் சகவாசம் என்று அத்தனை கெட்ட பழக்கங்களும் உண்டு. அவன் மாந்த்ரீகன் ஆனால் அவனால் பிரமச்சாரியாக இருக்க முடியாதே, அதனால் கிருஷ்ண பருந்தின் சாபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற கவலை அவன் அம்மாவிற்கு. ஆனால் குமாரன் தம்பிக்கு மந்திர உபதேசம் செய்வதில் அவன் மாமா பப்பு உறுதியாக இருக்கிறார். அதைப்போலவே செய்துவிட்டு உயிரை விடுகிறார்.
மாந்த்ரீகன் ஆன குமாரன் தம்பி பிரம்ச்சர்யத்தை தீவிரமாக கடைப்பிடிக்கிறான். அனுமனின் தீவிர உபாசகன் ஆகிறான். நிறைய மந்திர சித்திகளை பெறுகிறான். இவனை அழிக்க துர்மந்திரத்தை பிரயோகிக்கும் பட்டேத்திரி ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவுகிறான்.
புகழ் பெற்ற மாந்த்ரீகன் ஆகும் குமாரன்தம்பிக்குள் அடக்கி வைக்கப்படிருந்த காமம் ஒருநாள் விழித்தெழுகிறது. பழைய பெண் தொடர்புகளை புதுப்பிக்கும் குமாரன்தம்பி மந்திர சித்திகளை இழக்க ஆரம்பிக்கிறான். சமயம் பார்த்து காத்து கொண்டிருந்த பட்டேத்திரி அந்த பரம்பரையே அழிக்க அழிவு வேலைகளை ஆரம்பிக்கிறான். மீதி படிச்சு தெரிஞ்சுக்குங்க..
இதை வெறுமனே மாந்த்ரீக நாவல் என்று ஒதுக்கிவிடமுடியாது. நம்மூரில்,இப்பொழுதும் மலையாள பணிக்கரை கூப்பிட்டு பிரசன்னம் பார்கிறார்கள். இந்த கதை, அந்த காலகட்டத்தில் ஒரு மாந்த்ரீக பரம்பரையின் வாழ்க்கை முறையை முழுதாக விவரிக்கும் நூல். படிச்சு பாருங்க.
இந்த கதை பின்பு மோகன்லால் நடிக்க ஸ்ரீ கிருஷ்ண பருந்து என்ற பெயரில் 1984 லாம் வருடம் வெளியானது.
புத்தகம் வாங்க :
http://www.noolulagam.com/product/?pid=3657
http://www.noolulagam.com/product/?pid=3657
Karpakam puthakaalayam,
4/2, Sundaram street, Near nadesan park,
T,nagar, Chennai -17.
Phone : 2431 4347.
Email : info@karpagamputhakalayam.com
Price : Rs.190/
Movie scene : http://www.youtube.com/watch?v=RErwmMzDxRg